உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கைதானவர்களை விடுவிக்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் - 106 பேர் கைது


உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கைதானவர்களை விடுவிக்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் - 106 பேர் கைது
x
தினத்தந்தி 5 Dec 2018 11:15 PM GMT (Updated: 5 Dec 2018 10:56 PM GMT)

மொடக்குறிச்சி அருகே உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 106 பேரை போலீசார் கைது செய்தனர்.

மொடக்குறிச்சி,

மொடக்குறிச்சி அருகே உள்ள கணபதிபாளையம், அறச்சலூர், முத்தாயிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. இதற்காக நில அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு அந்தந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையொட்டி மலையம்பாளையம், சிவகிரி மற்றும் மொடக்குறிச்சி போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் பாதுகாப்புடன் நிலம் அளவிடப்படுகிறது.

அதன்படி நேற்று முன்தினம் கணபதிபாளையம், முத்தாயிபாளையம் பகுதியில் விவசாய நிலங்களில் அளவீடு செய்யும் பணி நடந்தது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நிலத்தை அளவீடு செய்வதை தடுத்து நிறுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் நிலத்தை அளவீடு செய்வதை தடுத்து நிறுத்தியதாக முத்தாயிபாளையத்தை சேர்ந்த முத்துவேல் (வயது 47), வேலம்பாளையம்புதூரை சேர்ந்த சிவக்குமார் (36), சின்னம்மாபுரத்தை சேர்ந்த ஆனந்தகுமார் (42), பி.கே.வேலம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (39), செங்கோடன் (62), நட்ராஜ் (63) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஈரோட்டில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆத்திரம் அடைந்தார்கள். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும், விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி முத்தாயிபாளையத்தில் உள்ள முத்துவேல் என்ற விவசாயியின் தோட்டத்தில் நேற்று பகல் 11 மணி அளவில் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ஏ.எம்.முனுசாமி தலைமையில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினார்கள்.

இதுபற்றி அறிந்த மொடக்குறிச்சி தாசில்தார் அஸ்ரப் புன்னிசா, பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் அவர்களிடம், போராட்டத்தை கைவிடுமாறு கூறினார்கள்.

அதற்கு விவசாயிகள், ‘கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம்’ என்று கூறி மறுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 106 பேரை கைது செய்தனர். இதில் 48 பேர் பெண்கள் ஆவர். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர் சச்சிதானந்தம், மொடக்குறிச்சி ஒன்றிய தி.மு.க. செயலாளர் குணசேகரன் ஆகியோர் அங்கு சென்று விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினர்.

கைது செய்யப்பட்ட 106 பேரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.



Next Story