குளச்சல் அருகே பதுக்கி வைத்திருந்த 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை


குளச்சல் அருகே பதுக்கி வைத்திருந்த 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Dec 2018 10:45 PM GMT (Updated: 6 Dec 2018 4:42 PM GMT)

குளச்சல் அருகே சைமன்காலனியில் கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 2 டன் ரே‌ஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குளச்சல்,

குமரி மாவட்டத்தில் ரே‌ஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி, மானிய விலையில் வினியோகம் செய்யப்படும் மண்எண்ணெய் போன்றவற்றை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதை தடுக்க போலீசார் மாவட்டத்தின் எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், பறக்கும்படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று வாகன சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கிறார்கள்.

ஆனாலும், கடத்தல்காரர்கள் அரிசி, மண்எண்ணெய் போன்றவற்றை சொகுசுகார் மூலமாகவும், சாலையோரங்களிலும், புதர்களிலும் பதுக்கி வைத்தும் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அதையும் அதிகாரிகள் கண்டறிந்து தடுத்து நிறுத்துகிறார்கள்.

குமரி மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் குளச்சல் அருகே சைமன்காலனி கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொருட்கள் தார்பாயால் மூடப்பட்டு இருப்பதை கண்டனர். உடனே அதிகாரிகள் தார்பாயை அகற்றினர். அப்போது, அங்கு சிறு, சிறு மூடைகளில் 2 டன் ரே‌ஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதை கண்டனர்.

 இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது இந்த அரிசி மூடைகள், கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அரிசியை பறிமுதல் செய்து உடையார்விளை அரசு குடோனில் ஒப்படைத்தனர்.

மேலும், அரிசியை பதுக்கி வைத்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story