கந்துவட்டி பிரச்சினையால்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயற்சி - விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


கந்துவட்டி பிரச்சினையால்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயற்சி - விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Dec 2018 10:30 PM GMT (Updated: 6 Dec 2018 4:44 PM GMT)

கந்துவட்டி பிரச்சினையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம்,

திருக்கோவிலூர் தாலுகா துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் அண்ணாத்துரை (வயது 32). இவர் நேற்று தனது தாய் செந்தாழம்பூ (60), மனைவி புனிதா (29), மகன் வசீகரன் (8), மகள்கள் ரமாதேவி (5), பிரியதர்ஷினி (3) ஆகியோருடன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் முன்பு வந்த அண்ணாத்துரை திடீரென தான் கொண்டு வந்திருந்த கேனை திறந்து, அதில் இருந்த மண்எண்ணெயை தனது தாய், மனைவி, குழந்தைகள் மீது ஊற்றிவிட்டு பின்னர் தன் மீதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று அவர்கள் 6 பேரையும் தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.

அதன் பிறகு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அண்ணாத்துரை கூறுகையில், எனது தந்தை சுப்பிரமணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பாலப்பந்தல் கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் கடனாக ரூ.2 லட்சம் வாங்கியிருந்தார். அதில் ரூ.1 லட்சத்தை வட்டியுடன் அடைத்துவிட்டார். மீதமுள்ள ரூ.1 லட்சத்தை கொடுக்காத நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

அதன்பிறகு கடன் கொடுத்தவர் என்னிடம் வந்து உனது தந்தை வாங்கிய கடனை இன்னும் அடைக்கவில்லை, வட்டியுடன் சேர்த்து மேலும் ரூ.2½ லட்சம் தர வேண்டும் என்று கேட்டு என்னையும், எனது குடும்பத்தினரையும் மிரட்டி வருகிறார். இதனால் எனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கே மிகவும் அச்சமாக உள்ளது.எனவே கந்துவட்டி கேட்டு மிரட்டும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களின் குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று திருப்பாலப்பந்தல் போலீசில் புகார் செய்தேன். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கந்துவட்டி வசூலிக்கும் நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.

இதை கேட்டறிந்த போலீசார், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்று அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story