விபத்தில் பலியான டாக்டர் உடலை வாங்க 3 மனைவிகளின் குடும்பத்தினர் போட்டா போட்டி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு


விபத்தில் பலியான டாக்டர் உடலை வாங்க 3 மனைவிகளின் குடும்பத்தினர் போட்டா போட்டி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Dec 2018 11:00 PM GMT (Updated: 6 Dec 2018 5:49 PM GMT)

விபத்தில் பலியான டாக்டரின் உடலை வாங்க 3 மனைவிகளின் குடும்பத்தினர் போட்டா போட்டி போட்டதால் சேலம் அரசு ஆஸ்பத் திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், 

சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணம் மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன்(வயது 64). டாக்டரான இவர் அதே பகுதியில் ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். இவருடைய முதல் மனைவி திலகவதி இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களில் மகன் அருண் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இதையடுத்து முருகன் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த சத்துணவு அமைப்பாளரான உமா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதற்கிடையில் முருகன் 3-வதாக சந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில், கடந்த 3-ந் தேதி முருகன் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள காட்டுப்புத்தூர் பகுதியில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.

இதைத்தொடர்ந்து அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. டாக்டர் முருகனுக்கு பலகோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளன. இந்த நிலையில் அவருடைய உடலை வாங்குவதற்காக முதல் மனைவியின் மகன், மகள் ஆகியோரின் குடும்பத்தினர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது 2-வது மற்றும் 3-வது மனைவியின் குடும்பத்தினரும் அங்கு திரண்டு வந்தனர்.

இதையடுத்து 3 மனைவிகளின் குடும்பத்தினரும் டாக்டரின் உடலை தாங்கள் தான் பெற்று செல்வோம் என்று போலீசாரிடம் தெரிவித்து போட்டா போட்டி போட்டனர். மேலும் அவர்கள் இதுதொடர்பாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 2-வது மனைவி உமா திடீரென குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் ஆஸ்பத்திரியில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் டாக்டர் முருகனின் உடலை முதல் மனைவியின் மகன் அருணிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து டாக்டரின் உடல் அவருடைய சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த சம்பவம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story