பழனியில்: ஆசிரியையிடம் தாலிச்சங்கிலி பறிப்பு - தப்பிச்செல்ல முயன்ற வாலிபருக்கு தர்ம அடி


பழனியில்: ஆசிரியையிடம் தாலிச்சங்கிலி பறிப்பு - தப்பிச்செல்ல முயன்ற வாலிபருக்கு தர்ம அடி
x
தினத்தந்தி 6 Dec 2018 10:15 PM GMT (Updated: 6 Dec 2018 9:13 PM GMT)

பழனியில், தனியார் பள்ளி ஆசிரியையிடம் 3 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்தனர். அவர்களில் பொதுமக்களிடம் சிக்கிய வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.

பழனி, 


பழனி திருநகரை சேர்ந்தவர் மகுடீஸ்வரன். இவருடைய மனைவி சாந்தி (வயது 35). இவர் பழனியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

பழனி நகராட்சி அலுவலகம் அருகே சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்துக்குள், சாந்தி அணிந்திருந்த 3 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர். அப்போது சாந்தி கூச்சல் போடவே அக்கம்பக்கத்தினர் மோட்டார் சைக்கிளில் சென்றவர் களை பிடித்து இழுத்தனர்.

இதில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதற்கிடையே மற்ற இரு வரும் தாலிச்சங்கிலியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து பழனி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கோட்டைமேட்டுத்தெருவை சேர்ந்த சாதிக் (20) என்பதும், தப்பிச்சென்றது அவருடைய நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பிச்சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story