கலெக்டர் அலுவலக வளாகம் அருகில் இடிந்து விழும் நிலையில் அரசு அலுவலர் குடியிருப்புகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


கலெக்டர் அலுவலக வளாகம் அருகில் இடிந்து விழும் நிலையில் அரசு அலுவலர் குடியிருப்புகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 6 Dec 2018 11:00 PM GMT (Updated: 6 Dec 2018 9:33 PM GMT)

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகம் அருகில் காலியாக உள்ள அரசு அலுவலர் அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் வீட்டு வசதி வாரியம் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர், 

கடந்த 1985-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் உதயமான போது சூலக்கரை பகுதியில் 300 ஏக்கரில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அமைக்கப்பட்டது. அதனையொட்டி அரசு அலுவலர்களுக்காக வீட்டுவசதி வாரியம் ஏ,பி,சி,டி என தரம் பிரித்து அடுக்குமாடி குடியிருப்பை கட்டியது.

அப்போதைய வீட்டுவசதி வாரிய தலைவர் திருப்பூர் மணிமாறன் இந்த குடியிருப்பை திறந்து வைத்தார். கட்டப்பட்ட அனைத்து வீடுகளிலும் அரசு அலுவலர்கள் குடியேறினர்.

கட்டப்பட்ட குடியிருப்புகள் முறையாக பராமரிக்கப்படாததால் சில வருடங்களிலேயே சேதம் அடைய தொடங்கியது. அதிகாரிகளுக்கான குடியிருப்பு குறுகிய கால அவகாசத்தில் சேதம் அடைந்ததால் அங்கு குடியிருந்த அதிகாரிகள் அனைவரும் காலி செய்தனர். அந்த குடியிருப்பு அப்படியே விடப்பட்டதால் சேதம் அடைந்து காணப்படுகிறது.

பி,சி,டி குடியிருப்புகளில் சேதம் அதிகரிக்க தொடங்கியதால் அங்கு குடியிருந்த அரசு அலுவலர்கள் பெரும்பாலானவர்கள் வீடுகளை காலி செய்தனர். மாடி வீட்டு முன்பகுதி இடிந்து விழுந்து கீழே குடியிருந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் வீட்டு வசதி வாரியமே அங்கு குடியிருக்கும் அனைவரையும் காலி செய்யமாறு வற்புறுத்தியது. அதன்பேரில் அனைவரும் காலி செய்தனர்.

அதன்பின்னர் வீட்டு வசதி வாரியம் அந்த குடியிருப்புகளை அப்படியே விட்டுவிட்டதால் அவை இடிந்து விழும் நிலையில் உள்ளன. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அங்கு நடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

விருதுநகரில் மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு அந்த இடம் தகுதியான இடம் என தேர்வு செய்யப்பட்டுள்ள போதிலும் கல்லூரி அமைக்கும் திட்டம் கனவாகி போனதால் குடியிருப்பு பகுதியில் மாற்று நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

தற்போது உள்ள நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட அலுவலகங்களில் 1000-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றி வரும் நிலையில் அலுவலர்கள் பலர் தினசரி மதுரை மற்றும் அருகில் உள்ள ஊர்களில் இருந்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே வீட்டுவசதி வாரியம் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த குடியிருப்பு பகுதிகளை அகற்றி விட்டு புதியதாக அரசு அலுவலர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை உரிய அடிப்படை வசதிகளோடு தரமாக கட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மாவட்ட அமைச்சரும், நிர்வாகமும் இதற்கான பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பி வைத்து குடியிருப்புகள் வருவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

Next Story