அரசு ஊழியர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


அரசு ஊழியர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 6 Dec 2018 10:45 PM GMT (Updated: 6 Dec 2018 9:41 PM GMT)

கரூரில் நடந்த அரசு ஊழியர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அன்பழகன் பரிசு வழங்கினார்.

கரூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை விளை யாட்டு அரங்கில் நேற்று அரசு ஊழியர்களுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்வித்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்பட பல்வேறு அரசு துறை ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 100, 200, 400, 800 மீட்டர் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடரோட்டம் உள்ளிட்ட தடகள போட்டிகள் இருபாலருக்கும் தனித் தனியாக நடத்தப்பட்டது. இதேபோல் கபடி, கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட குழு போட்டிகளும் நடத்தப் பட்டன. உடற்கல்வி ஆசிரி யர்கள் போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.

மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார். அவர் பேசுகையில், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வேலைப் பளுவின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும், பல்வேறு துறை சார்ந்த பணியாளர்களை ஒருங்கிணைத்து சகஜ நிலையை உருவாக்கி ஒருங் கிணைந்த துறை பணிகளை மேற்கொள்ளவும், அரசுப் பணியாளர்களிடத்தில் விளையாட்டில் உள்ள தனித் தன்மையை வெளிக் கொணரும் விதமாகவும் ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. எனவே இதில் திறமையை வெளிப்படுத்தியவர்கள் அதற்காக பயிற்சி எடுத்து கொண்டு மேலும் சாதிக்க வேண்டும், என்றார்.

தடகள போட்டிகளில் அதிக பரிசுகளை வென்று கல்வித்துறை முதல் இடத்தையும், சுகாதாரத்துறை இரண்டாம் இடத்தையும், ஊரக வளர்ச்சித்துறை மூன்றாம் இடத்தையும் பெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சரவண மூர்த்தி(கரூர்), மாவட்ட விளையாட்டு அதிகாரி சாந்தி, வட்டாட்சியர் ஈஸ்வரன் (கரூர்) ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story