சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினம் மும்பை சைத்ய பூமியில் கவர்னர், முதல்-மந்திரி அஞ்சலி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்


சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினம் மும்பை சைத்ய பூமியில் கவர்னர், முதல்-மந்திரி அஞ்சலி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்
x
தினத்தந்தி 7 Dec 2018 12:00 AM GMT (Updated: 6 Dec 2018 10:08 PM GMT)

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி மும்பை சைத்ய பூமியில் கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

மும்பை, 

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி மும்பை சைத்ய பூமியில் கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 62-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

அம்பேத்கர் நினைவு நாள்

மராட்டிய மாநில தலைநகர் மும்பை தாதரில் அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமி உள்ளது. இங்கு அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துவதற்காககடந்த செவ்வாய்க்கிழமை முதலே மாநிலம் முழுவதும் இருந்து மக்கள் குடும்பம், குடும்பமாக வரத்தொடங்கினர். அவர்கள் தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் தங்கி இருந்தனர். அங்கு மக்கள் தங்குவதற்கு வசதியாக கூடாரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் நடமாடும் கழிவறைகள், டேங்கர் லாரிகளில் குடிநீர் வசதி, மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

தனியார் அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில், வந்திருந்த மக்களுக்கு உணவு, தேநீர், குடிநீர் பாட்டில்கள், சிற்றுண்டி ஆகியவை வினியோகிக்கப்பட்டது.

இதேபோல மராட்டியம் தவிர உத்தரபிரதேசம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வந்தனர். இதனால் நேற்று தாதர் சிவாஜி பார்க் பகுதி, மக்கள் வெள்ளத்தால் நிரம்பி இருந்தது.

கவர்னர், முதல்-மந்திரி அஞ்சலி

நேற்று காலை 8.30 மணியளவில் அம்பேத்கரின் நினைவிடத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “உலகில் நமது நாட்டை உயரியதாக ஆக்கும் சக்தி கொண்ட அரசியலமைப்பு சட்டத்தை தந்த டாக்டர் அம்பேத்கரை வணங்குகிறேன். அதே அரசியல் சட்டத்தை நாம் பின்பற்றிக் கொண்டு இருக்கிறோம்.

அம்பேத்கரின் கனவான சமுதாயத்தின் கடைசி மனிதனும் சமஉரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என்ற சமகால சமுதாயத்தை உருவாக்க அரசாங்கம் கடைமைப்பட்டு இருக்கிறது” என்றார்.

பிரிதிவிராஜ் சவான்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பிரிதிவிராஜ் சவான் அஞ்சலி செலுத்திய பிறகு கூறுகையில், பா.ஜனதா ஆட்சியில் அரசியல் அமைப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா இரண்டு அரசியலமைப்பு எதிரான நிலைப்பாட்டையே எப்போதும் எடுக்கின்றன. சாதியத்தை எதிர்த்து, அரசியலைமைப்பை பாதுகாப்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. அம்பேத்கரின் கருத்தியலையும், அவர் உருவாக்கி தந்த அரசியலைப்பையும் பாதுகாப்பது தான் நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்றார்.

மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, ராம்தாஸ் அத்வாலே, மாநில கல்வி துறை மந்திரி வினோத் தாவ்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா சுலே எம்.பி., முன்னாள் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட், கச்ரு யாதவ், அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சோ்ந்த தலைவர்கள், மந்திரி, எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மற்றும் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதுதவிர பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த புத்த மத துறவிகளும் அம்பேத்கரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

ஆயிரக்கணக்கான மக்கள்

இதேபோல பொதுமக்கள்சுமார் 2 கி.மீ. நீள வரிசையில் பல மணி நேரம் காத்து நின்று அம்பேத்கரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பலர் தாதர் கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து மெழுவர்த்தி ஏந்தி அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டதால் சைத்ய பூமி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் உயர் கோபுரங்கள் அமைத்தும், தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும் கூட்டத்தை கண்காணித்து வந்தனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சுகள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன.

அஞ்சலி செலுத்த வந்த மக்களிள் வசதிக்காக தாதரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் நேற்று தாதரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல அஞ்சலி செலுத்தவிட்டு பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் திரும்பிய போது மேற்கு, கிழக்கு விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

Next Story