4 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி உறுதி நாராயணசாமி நம்பிக்கை


4 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி உறுதி நாராயணசாமி நம்பிக்கை
x
தினத்தந்தி 6 Dec 2018 10:37 PM GMT (Updated: 6 Dec 2018 10:37 PM GMT)

தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தல்களில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதி என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அம்பேத்கரின் படத்துக்கு காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசன சட்டத்தால்தான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. போராடாவிட்டால் நமது உரிமையை பெற இயலாது என்று அம்பேத்கர் கூறினார். அவரது வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். மேல்சாதியினர் இழிவுபடுத்தியபோது நாம் மேலே வர உழைத்தார். நமக்கு அடித்தளம் அமைத்தவரே அம்பேத்கர்தான். அவர் வழியில் நாம் நடக்கவேண்டும்.

ஒருசிலர் அம்பேத்கர் தனிப்பட்ட சமுதாயத்துக்கு சொந்தக்காரர் என்று கூறுகிறார்கள். அவர் ஒடுக்கப்பட்ட அனைத்து சமுதாயத்துக்கும் சொந்தக்காரர். அவரால்தான் எல்லா சமுதாயத்தினருக்கும் அங்கீகாரம் கிடைத்தது. எனவே அவர் ஒரு சமுதாயத்துக்குத்தான் சொந்தக்காரர் என்பதை ஏற்க முடியாது.

நாம் இப்போது தலை நிமிர்ந்து வாழ அவரது தொண்டுதான் காரணம். அம்பேத்கர் வழியில்தான் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகியோர் ஆட்சி நடத்தினார்கள். இடஒதுக்கீட்டை தந்ததே காங்கிரஸ் கட்சிதான். ஆனால் அதை தடுத்தது பாரதீய ஜனதா கட்சி.

நாம் இப்போது ஒற்றுமையாக இருக்கவேண்டும். டெல்லியிலும், புதுச்சேரியிலும் பல சக்திகளை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. இன்னும் 3 மாதத்தில் மாற்றங்கள் நடைபெறும். நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் 4 மாநில தேர்தலில் நாம் வெற்றிபெறுவது உறுதி. அதன்பின் சரித்திரம் மாறும்.

ஹெலிகாப்டர் முறைகேடு வழக்கில் சோனியாகாந்தியை குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதா? சகாரா, பனாமா விவகாரங்களில் பிரதமர் மோடியின் பெயரும் உள்ளது. இக்கட்டான காலகட்டத்தில் நாம் உள்ளோம். எல்லாவற்றுக்கும் இன்னும் 3 மாத காலத்தில் விடிவு பிறக்கும். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன், காங்கிரஸ் நிர்வாகிகள் நீல.கங்காதரன், தேவதாஸ், ஏ.கே.டி.ஆறுமுகம், வீரமுத்து, தனுசு, சாம்ராஜ், ரகுமான், இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story