பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி: த.மு.மு.க -எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி: த.மு.மு.க -எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2018 10:15 PM GMT (Updated: 6 Dec 2018 10:42 PM GMT)

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி த.மு.மு.க மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு, 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி ஈரோட்டில் சூரம்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மீரான் முன்னிலை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், த.மு.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் முகம்மது ரிஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். பாபர் மசூதி வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பை வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம், ஐ.யு.எம்.எல். மாவட்ட தலைவர் நூர்சேட், த.மு.மு.க. மாவட்ட பொருளாளர் பஜ்லுல் ஹக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் பாபர் மசூதி இடிப்பை கண்டித்து சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி (எஸ்.டி.பி.ஐ.) சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முகமது ஹசன் அலி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கீம் முன்னிலை வகித்தார்.

தொழிற்சங்க பிரிவு மாநில தலைவர் பாரூக், காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் உபைதுல்லா மற்றும் ஹசன்பாபு, முகமது துரையப்பா, சகிலாபானு, சபியா உள்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

Next Story