அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் இல.கணேசன் பேச்சு


அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் இல.கணேசன் பேச்சு
x
தினத்தந்தி 6 Dec 2018 11:00 PM GMT (Updated: 6 Dec 2018 11:00 PM GMT)

அயோத்தியில் ராமர்கோவில் கட்டியே தீருவோம் என்று ராமநாதபுரத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.

ராமநாதபுரம்,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரி ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி சார்பில் அரண்மனை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் ரெத்தினசபாபதி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் மற்றும் இந்து முன்னணி மாநில செயலாளர் ஆடலரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட செயலாளர் ஆத்மாகார்த்திக், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜசேகர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- ராமர்கோவில் கட்டும் பிரச்சினை என்பது பல ஆண்டுகளாக நடைபெற்றுவருவது. கோர்ட்டு தீர்ப்பின் மூலமோ, சுமுக தீர்வின்மூலமோ நிச்சயம் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவோம். மத்திய அரசோ, உத்தரபிரதேச அரசோ அவசர சட்டம்கொண்டு வந்தால் ராமர் கோவில் கட்ட முடியும்.

ஆனால், எதிர்கட்சியான காங்கிரஸ் தேர்தல் ஆதாயத்திற்காக ராமர்கோவில் பிரச்சினையை கையில் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டுகிறது. கோர்ட்டில் விரைவில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கான பூர்வாங்க பணி ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இதற்காக திருப்பணி குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சிற்பங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அனுமதி கிடைத்தால் உடனடியாக பணிகள் தொடங்கி 6 மாதத்தில் கோவில் கட்டி முடிக்கப்படும். ராமர் கோவில் கட்டியே தீருவோம். கர்நாடகாவில் அணை கட்ட மத்திய அரசு எந்தவித அனுமதியும் வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story