குன்னூர் அருகே: விவசாய பயிர்களை நாசப்படுத்திய காட்டுயானைகள்


குன்னூர் அருகே: விவசாய பயிர்களை நாசப்படுத்திய காட்டுயானைகள்
x
தினத்தந்தி 7 Dec 2018 10:15 PM GMT (Updated: 7 Dec 2018 5:54 PM GMT)

குன்னூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள் விவசாய பயிர்களை நாசப்படுத்தின.

குன்னூர்,

குன்னூர் அருகே உள்ளது தூதூர்மட்டம் நாக்குநேரி கிராமம். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தூதூர்மட்டம் அருகில் உள்ள டெரேமியா பகுதியில் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய 4 காட்டுயானைகள் முகாமிட்டு வந்தன. அங்கு விவசாய பயிர்களை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்தன. மேலும் தோட்டங்களில் அமைக்கப்பட்டு இருந்த கொட்டகைகளையும் சேதப்படுத்தின.

இந்த காட்டுயானைகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் நாக்குநேரி கிராமத்துக்குள் புகுந்தன. பின்னர் அங்கு சரவணன் என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த மேரக்காய், பீன்ஸ் மற்றும் வாழைகளை நாசப்படுத்தின. தொடர்ந்து விடிய, விடிய அங்கேயே முகாமிட்ட காட்டுயானைகளால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

பின்னர் காட்டுயானைகள் அட்டகாசம் குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று அதிகாலையில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், பட்டாசு வெடித்து காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். பின்னர் காட்டுயானைகள் பயிர்களை சேதப்படுத்திய தோட்டத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து விவசாயி சரவணன் கூறும்போது, காட்டுயானைகள் அட்டகாசத்தால் ரூ.2 லட்சம் மதிப்பிலான விவசாய பயிர்கள் நாசம் அடைந்து உள்ளன. இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும் காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Next Story