21 நாட்களாக உள் கிராமங்களில் மின்வினியோகம் இல்லாமல் அவதி: கிராமமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


21 நாட்களாக உள் கிராமங்களில் மின்வினியோகம் இல்லாமல் அவதி: கிராமமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 7 Dec 2018 10:45 PM GMT (Updated: 7 Dec 2018 6:56 PM GMT)

மருதூர், ஆயக்காரன்புலம் உள் கிராமங்களில் தொடர்ந்து 21 நாட்களாக மின்வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாய்மேடு,

மருதூர், ஆயக்காரன்புலம் உள் கிராமங்களில் தொடர்ந்து 21 நாட்களாக மின்வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த மருதூரில் கஜா புயலால் குடிசை வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் என பெருமளவில் சேதமடைந்தன. வாய்மேடு துணை மின் நிலையத்தில் இருந்து ஆயக்காரன்புலம், பஞ்சநதிக்குளம், தென்னடார், மருதூர், தகட்டூர், தாணிக்கோட்டகம், வாய்மேடு மற்றும் துளசியாப்பட்டினம் ஆகிய பகுதிகள் மின்வினியோகம் பெற்று வருகின்றன. இந்த பகுதிகளில் புயலால் பல மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் பெருமளவில் பழுதடைந்தன. இந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்து மின்வினியோகம் கிடைத்தது. இந்த மின்வினியோகம் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

மருதூர் கீழக்காடு, பூவன்காடு, மதியன்தோப்பு உள்பட பல உள்கிராமங்களில் இன்னும் மின்வினியோகம் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த 21 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருதூர் நடேச தேவர் கடை அருகே மின்வினியோகம் வழங்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பியவாறு, நேற்று 100–க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அவர்கள் சாலையில் சமையல் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயக்காரன்புலம் குளவி பஸ் நிறுத்தம் அருகே 50–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருத்துறைப்பூண்டி–வேதாரண்யம் சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story