பாளையங்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்


பாளையங்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2018 10:00 PM GMT (Updated: 7 Dec 2018 7:50 PM GMT)

பாளையங்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

20 அம்ச கோரிக்கை

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி நெல்லை மாவட்டம் சார்பில் பாளையங்கோட்டை சித்தா கல்லூரி முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதல் உள்பட அனைத்து விதமான பட்டா மாறுதல்களிலும் கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலரின் கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கணினி, இணையதள வசதி, அலுவலக கட்டிடங்களில் கழிப்பறை, மின்வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரதம்

உண்ணாவிரத போராட்டத்துக்கு நெல்லை மாவட்ட தலைவர் முத்துசெல்வன் தலைமை தாங்கினார். பொருளாளர் அருள்மாரி, துணைத்தலைவர் ராஜசேகர், துணை செயலாளர் ராம்குமார், அமைப்பு செயலாளர் ஆறுமுகம், பிரசார செயலாளர் வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் பாளையங்கோட்டை தாலுகா தலைவர் ஜெயராமன், பொருளாளர் பொன்ராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் முடிவில் பேசிய நிர்வாகிகள் அடுத்தகட்டமாக வருகிற 10-ந்தேதியில் இருந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்தனர்.

Next Story