காலாப்பட்டு சிறையில் உண்ணாவிரதம் இருந்த கைதிகள் 7 பேர் மயக்கம்


காலாப்பட்டு சிறையில் உண்ணாவிரதம் இருந்த கைதிகள் 7 பேர் மயக்கம்
x
தினத்தந்தி 7 Dec 2018 11:00 PM GMT (Updated: 7 Dec 2018 8:06 PM GMT)

சிறையில் தண்டனை கைதிகள் நேற்று 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். இதில் 7 பேர் மயக்கம் அடைந்தனர்.

காலாப்பட்டு,

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் 54 தண்டனை கைதிகளும், 150-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும் உள்ளனர். தண்டனை கைதிகள் 25 பேர் பரோலில் செல்ல அனுமதி கேட்டு சிறைத்துறை சூப்பிரண்டு மூலம் அரசுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் கடந்த 4 மாதங்களாக அந்த விண்ணப்பங்கள் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதை கண்டித்து கடந்த 5-ந் தேதி இரவு முதல் தண்டனை கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த உடன் சிறைத்துறை சூப்பிரண்டு பாஸ்கரன் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் பேச்சுவாரத்தை நடத்தினார். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை.

இந்த நிலையில் நேற்றும் அவர்களது உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது. சிறைத்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிடாமல் 3 வேளையும் சாப்பிட மறுத்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சோர்வாக இருந்தனர்.

நேற்று இரவு கைதிகள் செல்வம், வடிவேல் உள்பட 7 பேர் திடீரென்று மயங்கி விழுந்தனர். இதில் செல்வம், வடிவேல் ஆகிய 2 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 5 பேருக்கு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்த போராட்டத்தில் விசாரணை கைதிகள் ஈடுபடாமல் அவர்கள் வழக்கம் போல் சாப்பிட்டனர்.

Next Story