சேலத்தில் பரோட்டா மாஸ்டர் தீக்குளித்து தற்கொலை


சேலத்தில் பரோட்டா மாஸ்டர் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 7 Dec 2018 10:45 PM GMT (Updated: 7 Dec 2018 8:16 PM GMT)

சேலத்தில் பரோட்டா மாஸ்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம், 

சேலம் சாமிநாதபுரம் வண்டிபேட்டை தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 56). இவர் 3 ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தங்கமணி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

பாலகிருஷ்ணனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குடலில் புண் ஏற்பட்டு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று முன்தினம் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வயிற்றுவலிக்கு சிகிச்சை பெற்றார்.

இருந்தாலும் வயிற்றுவலி முழுமையாக குணமாகவில்லை என்பதால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது, பாலகிருஷ்ணன் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். வலியால் அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் பாலகிருஷ்ணன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு பாலகிருஷ்ணன் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், பின்னர் தான் தீக்குளித்து தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது, அவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றது குறித்து உறவினர்கள் யாரும் போலீ சாரிடம் தெரிவிக்கவில்லை‘ என்றனர்.

Next Story