பள்ளி மாணவ–மாணவிகளை தாக்கிய வழக்கில் வாலிபர் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு ஜெயில்


பள்ளி மாணவ–மாணவிகளை தாக்கிய வழக்கில் வாலிபர் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 7 Dec 2018 9:30 PM GMT (Updated: 7 Dec 2018 8:31 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளி மாணவ–மாணவிகளை தாக்கிய வழக்கில் வாலிபர் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள தோப்படைப்பட்டி பகுதியை சேர்ந்த மாணவ–மாணவிகள் கமுதி அரசு பள்ளியில் படிக்க அரசு பஸ்சில் கடந்த 2011–ம் ஆண்டு ஜனவரி மாதம் 2–ந் தேதி சென்று கொண்டிருந்தனர். அப்போது கமுதி புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் இருக்கையில் இடம் இல்லாத நிலையில் தோப்படை பட்டியை சேர்ந்த மாணவ–மாணவிகளை சாதியை சொல்லி திட்டியதோடு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக பள்ளி முடிந்து தோப்படைபட்டி மாணவ–மாணவிகள் பஸ்சில் திரும்பி வந்தபோது புதுக்கோட்டை பஸ் நிறுத்த பகுதியில் வழிமறித்த கும்பல் பஸ்சில் ஏறி மாணவ–மாணவிகளை உருட்டு கட்டையால் தாக்கினார்களாம். இதில் மாணவ–மாணவிகள் காயம் அடைந்தனர். இதுகுறித்து பள்ளி மாணவர் பாலுச்சாமி மகன் விஜயகுமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டையை சேர்ந்த வீரபாண்டி(45), புலிஉடையான்(45), செந்தூர்பாண்டி(55), முருகன்(54), விக்னேஷ்(34), முனீஸ்வரன்(35) ஆகியோரை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கயல்விழி, சாதியை சொல்லி திட்டியதோடு, மாணவ–மாணவிகளை தாக்கிய வீரபாண்டிக்கு 3 ஆண்டு கடுங்காவலுடன் ஜெயில் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும், முனீஸ்வரனுக்கு 3 ஆண்டு ஜெயில்தண்டனையும், 12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், புலிஉடையான் என்பவருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதமும், செந்தூர்பாண்டி, முருகன், விக்னேஷ் ஆகியோருக்கு தலா ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். ரூ.28 ஆயிரம் அபராத தொகையில் ரூ.27 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட 3 மாணவிகளுக்கு தலா ரூ.9 ஆயிரம் வீதம் வழங்கவும், மீதம் ரூ.ஆயிரத்தினை வழக்கு செலவிற்கு அரசு கணக்கில் செலுத்தவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் காமராஜ் ஆஜரானார்.


Next Story