வீரகேரளத்தில்: மதுபாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய ஆசாமி கைது


வீரகேரளத்தில்: மதுபாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய ஆசாமி கைது
x
தினத்தந்தி 7 Dec 2018 10:00 PM GMT (Updated: 7 Dec 2018 9:28 PM GMT)

மதுபாரில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியை காண்பித்து மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

வடவள்ளி,

கோவை வீரகேரளத்தில் டாஸ்மாக் மது பார் உள்ளது. நேற்று இரவு இந்த பாருக்கு செல்வபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 39) என்பவர் மது குடிக்க வந்தார். இவர் பால்பண்ணை நடத்தி வருகிறார். கோவை ராம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியவர்.குடிபோதையில் திடீரென்று தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்து இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சுட்டுவிடுவதாக மிரட்டினார். இதனால் மதுகுடிக்க பாருக்கு வந்தவர்கள், துப்பாக்கியை பார்த்ததும் அங்கிருந்து வெளியேறி தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, பார் ஊழியர்கள் சிவக்குமாரை மடக்கிப்பிடித்து வடவள்ளி போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் அவரிடம் விசாரணை நடத்தினார். மேலும் அவர் வைத்து இருந்த ஒரு வாக்கிடாக்கி மற்றும் அரை அடி நீளமுள்ள கத்தி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. கைத்துப்பாக்கி ‘ஏர்கன் பிஸ்டல் 2.2’ ரகத்தை சேர்ந்தது. பறவைகளை சுட பயன்படுத்தும் துப்பாக்கியாகும். துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர் வனப்பகுதியில் சுற்றி திரிபவர் என்றும், மின்சாதன பொருட்களை சேகரிக்கும் ஆர்வம் உள்ளவர் என்றும் தெரியவந்தது. குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட சிவக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story