புதுக்கோட்டை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சம்


புதுக்கோட்டை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 7 Dec 2018 10:00 PM GMT (Updated: 7 Dec 2018 9:39 PM GMT)

புதுக்கோட்டை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி கஜா புயல் தாக்கியது. இதில் புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் போன்றவை சாய்ந்தன. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மீட்பு பணிகள் நடைபெற்றதை தொடர்ந்து நகராட்சி பகுதிகளில் 100 சதவீதம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பி உள்ளது.

இந்நிலையில் தற்போது புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் புயலின்போது பெய்த மழை மற்றும் பின்னர் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக மழைநீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி உள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பெரியார்நகர் பகுதியில் ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

தேங்கி கிடக்கும் மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதியில் உள்ள மக்களை கடிப்பதால், அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு வகையான காய்ச்சல் ஏற்படுகிறது. பெரியார்நகர் பகுதியில் உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

இது குறித்து பெரியார்நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கஜா புயல் தாக்கியதில் இருந்து மழைநீர் குளம்போல் ஆங்காங்கே தேங்கி உள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மழைபோல் குவிந்து கிடக்கிறது. மேலும் பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, பொதுமக்களை கடிப்பதால், சிலருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டனர். சிலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர், என்றனர்.

Next Story