காதல் கணவரை தேடி அலையும் இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தபோது மயங்கி விழுந்தார்


காதல் கணவரை தேடி அலையும் இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தபோது மயங்கி விழுந்தார்
x
தினத்தந்தி 7 Dec 2018 11:28 PM GMT (Updated: 7 Dec 2018 11:28 PM GMT)

காதல் கணவரை தேடி அலையும் இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தபோது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் ஜெயிலிசிஸ் (வயது 20). பட்டதாரியான இவர், சென்னை ஸ்பென்சர் வணிக வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்தார். ஏழை குடும்பத்தை சேர்ந்த இவர் தான் வேலை பார்த்த கடை உரிமையாளரின் மகனை காதலித்தார். காதலுக்கு எதிர்ப்பு வலுத்ததால் இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்று திருமணம் செய்துகொண்டனர். 3 மாதங்கள் சேர்ந்து வாழ்ந்தனர்.

இந்த நிலையில் ஜெயிலிசிஸ் மாமனார் அவரது காதல் கணவரை கடத்திச் சென்றுவிட்டதாக தெரிகிறது. கணவர் எங்கு இருக்கிறார்? என்று தெரியாமல் ஜெயிலிசிஸ் பல இடங்களில் தேடினார். கணவரை கண்டுபிடிக்க முடியாததால் நேற்று ஜெயிலிசிஸ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.

கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது கணவரை எனது மாமனார் என்னிடம் இருந்து பிரித்துவிட்டார். என் கணவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை கண்டுபிடித்து மீட்டு என்னிடம் ஒப்படைக்கும்படி வேண்டுகிறேன். இதுதொடர்பாக அயனாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் அயனாவரம் போலீசார் எனது புகாரை வாங்க மறுத்துவிட்டனர். இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனு கொடுத்துவிட்டு வெளியில் வந்த ஜெயிலிசிஸ் கமிஷனர் அலுவலக வாசல் அருகே வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு ஜெயிலிசிஸ் குணமடைந்தார்.

ஜெயிலிசிஸ் மயங்கி விழுந்த சம்பவம் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story