கஜா புயலுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள் குறைந்த அளவு மீன்கள் கிடைத்ததால் ஏமாற்றம்


கஜா புயலுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள் குறைந்த அளவு மீன்கள் கிடைத்ததால் ஏமாற்றம்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:45 PM GMT (Updated: 8 Dec 2018 7:06 PM GMT)

கஜா புயலுக்கு பிறகு நேற்று தரங்கம்பாடி பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

பொறையாறு,

தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி ஏற்பட்ட கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. கஜா புயலால் மீனவர்களின் படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. அதனை தொடர்ந்து ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக விட்டு, விட்டு மழை பெய்தது.

புயல் மற்றும் மழையால் தரங்கம்பாடி, சந்திரப்பாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக் கோவில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து நீண்ட நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். மீன்பிடிக்க செல்லாததால் சில மீனவர்கள் தங்களது பைபர் படகுகளை காரைக்கால், நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு சென்று பழுது நீக்கம் செய்தனர்.

இந்தநிலையில் கஜா புயலுக்கு பிறகு நேற்று தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆனால், குறைந்த அளவு மீன்களே சிக்கியதால் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். சிறிய வகை மீன்களே வலையில் சிக்கியதால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கஜா புயல், மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக நீண்ட நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. கஜா புயலால் படகு மற்றும் மீன்பிடி வலைகள் சேத மடைந்துள்ளன. தொடர்ந்து மீன்பிடிக்க செல்லாததால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்றோம். ஆனால் குறைந்த அளவு மீன்களே சிக்கி உள்ளன. இதனால் மேலும் பொருளாதாரம் இன்றி பாதிக்கப்பட்டு வருகிறோம். இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு உடனே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story