போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்


போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:00 PM GMT (Updated: 8 Dec 2018 7:47 PM GMT)

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கேசவன் அறிவுறுத்தினார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கேசவன் தலைமை தாங்கினார். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பன்வால், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, வீரவல்லவன், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பழனிசாமி, காரைக்கால் நகராட்சி ஆணையர் சுபாஷ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் கேசவன் பேசியதாவது:-

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 39 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். வருகிற ஆண்டில் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை, காவல்துறையினர், பஞ்சாயத்து நிர்வாகங்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சாலை விபத்துகளை குறைப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கையை அரசுத்துறை அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை, கடற்கரை சாலை மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களிடையே சாலை போக்குவரத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Next Story