மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தை அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் கிருஷ்ணகிரியில், ஜி.கே.வாசன் பேச்சு


மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தை அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் கிருஷ்ணகிரியில், ஜி.கே.வாசன் பேச்சு
x
தினத்தந்தி 8 Dec 2018 11:15 PM GMT (Updated: 8 Dec 2018 8:24 PM GMT)

மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தை அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் கூறினார்.

கிருஷ்ணகிரி,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் ஏற்கனவே காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயலால் தமிழக மக்கள், விவசாயிகள் குறிப்பாக டெல்டா மாவட்ட மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு துயரமான சூழ்நிலையை அவர்கள் சந்தித்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் சற்றும் மனிதாபிமானம் இல்லாமல் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறது. இதற்கு மத்திய அரசும், அதன் நீர்வள ஆணையமும் அனுமதி கொடுத்து இருப்பது வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவதை போல உள்ளது.

மேகதாதுவில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் ஒகேனக்கல் அருகாமையில் உள்ளது. இந்த பகுதியில் புதிய அணை கட்ட அனுமதித்து, ஆய்வு செய்ய அனுமதிப்பது கர்நாடக அரசும், மத்திய அரசும் தமிழகத்தின் மீது தொடுக்கும் யுத்தம் ஆகும். உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட அளவு டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று அறிவித்ததை கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை.

புதிய அணைகள் கட்ட கூடாது என்று உச்சநீதிமன்றம், காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்புகளை கர்நாடக அரசு மதிக்கவில்லை. மாறாக மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்கிறது. இது 67 டி.எம்.சி. தண்ணீரை தேக்க கூடிய திட்டமாகும். 49 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்தே தமிழகத்திற்கு உரிய தண்ணீர் இதுவரை கிடைக்கவில்லை.

தமிழகத்திற்கு அருகில் அணை கட்டுவதால் குறிப்பாக தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக படிப்படியாக காவிரியில் நாம் உரிமையை இழந்துள்ளோம். இந்த நிலையில் காவிரியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட தமிழகத்திற்கு கிடைக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்கிறது.

தமிழகத்தில் ஏற்கனவே உணவு பற்றாக்குறை உள்ளது. இதற்காக பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை போன்றவை தமிழகத்திற்கு பெறும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் மேகதாது அணை கட்டப்பட்டால் மிகவும் மோசமான சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்படும். டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும். தமிழகத்தில் திருப்பூர் முதல் வேலூர் வரை, ஒகேனக்கல் முதல் நாகப்பட்டினம் வரையில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்படும். மேலும் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.

எனவே மேகதாது அணை கட்டும் திட்டத்தை நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். இதற்காக த.மா.கா. தொடர்ந்து போராடும். காவிரி நதிநீர் நமக்கு பயிர் பிரச்சினை மட்டுமல்ல. நமது உயிர் சம்பந்தமான பிரச்சினை. இந்த விஷயத்தில் கர்நாடக அரசு தன்னிசையாக செயல்படுகிறது. நியாயத்திற்கு எதிராக செயல்படுகிறது.

எனவே மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு ஆய்வு செய்ய அனுமதித்தது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுவதை காட்டுகிறது. மத்திய பா.ஜனதா அரசு, கர்நாடக அரசு ஆகியவை தமிழகத்திற்கு எதிராக தொடர்ந்து செல்லபடுகிறது. இதை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.

மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடகா அரசு உடனடியாக கைவிட வேண்டும். இந்த பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். தமிழக விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு செயல்களையும் எதிர்த்து த.மா.கா. தொடர்ந்து போராடும்.

த.மா.கா. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. காமராஜர், ஜி.கே.மூப்பனார் வழியில் பணிகளை தொடர்ந்து ஆற்றி வருகிறது. த.மா.கா. தொடர்ந்து பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது என்பதை கடந்த 1-ந் தேதி அரியலூரில் நடந்த த.மா.கா. கூட்டம் நிரூபித்துள்ளது.

இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். மாநில செயலாளர்கள் காசிலிங்கம், தசரதன் என்கிற மனோகரன், வக்கீல் செல்வம், மாவட்ட தலைவர்கள் கேசவரெட்டி, கே.ஜி.பிரகாஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், மாநில நிர்வாகிகள் கோவை தங்கம், விடியல் சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் சத்தியநாராயணன் நன்றி கூறினார்.

Next Story