30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டாஸ்மாக்’ பணியாளர்கள் 5 மண்டலங்களில் உண்ணாவிரத போராட்டம்


30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டாஸ்மாக்’ பணியாளர்கள் 5 மண்டலங்களில் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:45 PM GMT (Updated: 8 Dec 2018 9:13 PM GMT)

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5 மண்டலங்களில் ‘டாஸ்மாக்’ பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநில தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர கால முறை ஊதியம் வழங்கவேண்டும், டாஸ்மாக் ஊழியர்களிடம் பணம் பறித்து செல்லப்படும் கொள்ளை சம்பவங்களை தடுக்க டாஸ்மாக் நிர்வாகமே கடைகளுக்கு நேரடியாக வந்து பணத்தை வாங்கி செல்லவேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி, சென்னை, கோவை, சேலம், மதுரை மண்டலங்களில் ஜனவரி 24-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்களை விளக்கி கு.பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு விதிமுறைகளை மீறி பணியிடம் மாற்றம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் வாய்மொழி உத்தரவு மூலமாகவே டாஸ்மாக் நிர்வாகத்தில் நடந்து வருகிறது. சட்டவிரோத பார்களை நிர்வாகம் ஊக்குவிப்பதை கைவிடவேண்டும். விற்பனை தொகையை கடைகளில் தான் வைத்துக்கொள்ளவேண்டும் என நிர்வாகம் கூறுகிறது. போலீசார் கடையில் பணத்தை வைக்க கூடாது, தினமும் எடுத்து செல்லவேண்டும் என கூறுகிறார்கள். இதனால், பணியாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

ஊழியர்களிடம் இருந்து இதுவரை சுமார் 10 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. 2 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். எனவே, ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளை வெளியே கொண்டு வர சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் நிர்வாகிகள் முருகானந்தம், ஜவகர்லால் நேரு, கண்ணன், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story