வீட்டின் முன்பு மர்ம நபர்களால் 7 பவுன் நகைக்காக தாக்கப்பட்ட மூதாட்டி பரிதாப சாவு கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரணை


வீட்டின் முன்பு மர்ம நபர்களால் 7 பவுன் நகைக்காக தாக்கப்பட்ட மூதாட்டி பரிதாப சாவு கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 8 Dec 2018 10:00 PM GMT (Updated: 8 Dec 2018 9:46 PM GMT)

ஓமலூர் அருகே 7 பவுன் நகைக்காக மர்ம நபர்களால் தாக்கப்பட்ட மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இதனால் நகை பறிப்பு வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓமலூர், 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாலிக்கடை குமரன் நகரை சேர்ந்தவர் சின்னபையன் (வயது 70). ஆட்டு வியாபாரி. இவருடைய மனைவி லட்சுமி (65). இவர்களது மகன் மணிகண்டன் (28). இவரது மனைவி எம்.லட்சுமி (24). இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சின்னபையன் ஆட்டு வியாபாரத்துக்கு சென்று விட்டார். அதன்பிறகு வெளியே வந்த லட்சுமி வீட்டின் முன்பு நின்றுக்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை தாக்கி, கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியில் வந்த மருமகள் எம்.லட்சுமி, மாமியார் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் முதலில் நகை பறிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மூதாட்டி லட்சுமி இறந்ததால், அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர். தொடர்ந்து போலீசார் மூதாட்டியை கொன்று நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story