விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்


விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 9 Dec 2018 11:00 PM GMT (Updated: 9 Dec 2018 6:09 PM GMT)

விடுமுறையையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும், காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தும் செல்வார்கள். இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2,700 கனஅடி தண்ணீர் வந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியது.

இந்தநிலையில் நேற்று வாரவிடுமுறை என்பதால் ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் நண்பர்கள், குடும்பத்தினருடன் பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் ஐந்தருவி, மணல் திட்டு, பெரியபாணி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றனர். மேலும் பார்வை கோபுரம், தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றின் அழகை அவர்கள் கண்டு ரசித்தனர்.


ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் மீன் அருங்காட்சியகம், முதலை பண்ணை, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதன் காரணமாக போலீசார் மெயின் அருவி, நடைபாதை மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மதுபாட்டில்கள் எடுத்து வருகிறார்களா? என போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

Next Story