புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் அமைச்சர் காமராஜ் தகவல்


புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் அமைச்சர் காமராஜ் தகவல்
x
தினத்தந்தி 9 Dec 2018 10:45 PM GMT (Updated: 9 Dec 2018 6:51 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப் படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். இதில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதா, மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் மின்சாரத்தை பொறுத்தவரை நகர் பகுதிகளில் 100 சதவீதமும், முத்துப்பேட்டை பேரூராட்சியில் 75 சதவீதமும், கிராம பகுதிகளில் 52 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 20 ஆயிரம் மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு, சில நாட்களில் வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதலாக மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின் சீரமைப்பு பணிகள் விரைவுப்படுத்தப்படும்.

இதுவரை 20 ஆயிரத்து 79 குடும்பங்களுக்கு ரூ.9 கோடியே 16 லட்சம் வங்கி கணக்கில் புயல் நிவாரண நிதியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கஜா புயலினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சப்-கலெக் டர்கள் ஆதித்தியா, கார்மேகம், சினேகா, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story