குடும்ப சுமையை போலீசார் பணியில் கொண்டு வரக்கூடாது மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ பேச்சு


குடும்ப சுமையை போலீசார் பணியில் கொண்டு வரக்கூடாது மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ பேச்சு
x
தினத்தந்தி 9 Dec 2018 10:45 PM GMT (Updated: 9 Dec 2018 7:41 PM GMT)

குடும்ப சுமையை போலீசார் பணியில் கொண்டு வரக்கூடாது என்று காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜூ தெரிவித்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனஅழுத்தம் இல்லாமல் மனநிறைவோடு வாழ காவலர் நிறைவாழ்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பு கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரை நடந்தது. முதற்கட்டமாக அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 2 பேர், சப்- இன்ஸ்பெக்டர்கள் 3 பேர், போலீசார் 30 பேர் என மொத்தம் 35 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கடந்த 3 நாட்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் நிறைவாழ்வு பயிற்சி முகாம் முதல் போலீஸ் குழுவிற்கு நேற்றுடன் முடிவடைந்தது.

23 குழுக்களாக பிரிக்கப்பட்டு...

இதில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

போலீசார் தங்களது பணி சுமையை குடும்பத்துக்கும், குடும்ப சுமையை பணியின் போது கொண்டு வரக்கூடாது. அப்படி கொண்டு வருவதினால் தான் போலீசாருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த மன அழுத்தத்தை போக்குவதற்காக தமிழக அரசு போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்கும் பயிற்சியினை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி இந்தியாவில் வேறு எங்கும் அளிக்கப்படுவதில்லை. அரியலூர் மாவட்டத்தில் உள்ள போலீசார் 23 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒவ்வொரு குழுவாக வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் அனைவருக்கும் பயிற்சி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து அவர் பயிற்சி பெற்ற போலீசாருக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். 

Next Story