பல்லடம் அருகே அடுத்தடுத்த விபத்துகளில் 2 பேர் பலி


பல்லடம் அருகே அடுத்தடுத்த விபத்துகளில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 9 Dec 2018 10:34 PM GMT (Updated: 9 Dec 2018 10:34 PM GMT)

பல்லடம் அருகே அடுத்தடுத்த நடந்த விபத்துகளில் 2 பேர் பலியாயினர்.

காமநாயக்கன்பாளையம்,

பல்லடம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பரசு (வயது37). இவர் பல்லடம் பஸ் நிலைய பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பல்லடம்பஸ் நிலையத்தில் ஆட்டோவை நிறுத்தி விட்டு நடந்து கொசவம்பாளையம் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றபோது ஒரு வாகனம் அன்பரசு மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர் பலத்த காயங்களுடன் கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அன்பரசுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதேபோல் பல்லடம் ஊஞ்சப்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் சேகர் (வயது 50). இவர் கரடிவாவியில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு வேலை முடிந்து மொபட்டில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். பல்லடம்- பூமலூர் சாலையில் உள்ள காளிவேலம்பட்டி பிரிவு அருகே வரும்போது நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து விட்டார். அவ்வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின்படி ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பல்லடம் போலீசார் இந்த 2 விபத்துகள் குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story