புஞ்சைபுளியம்பட்டி அருகே துணிகரம் கோவில் பூட்டை உடைத்து பூஜை பொருட்கள் திருட்டு


புஞ்சைபுளியம்பட்டி அருகே துணிகரம் கோவில் பூட்டை உடைத்து பூஜை பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 10 Dec 2018 11:15 PM GMT (Updated: 10 Dec 2018 8:58 PM GMT)

புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவில் பூட்டை உடைத்து பூஜை பொருட்களை திருடிய கொள்ளையர்கள், அங்கிருந்த பீரோவை தூக்கிச்சென்று கோவிலுக்கு வெளியே போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

புஞ்சைபுளியம்பட்டி,

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியை அடுத்த நல்லூரில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவில் புஞ்சைபுளியம்பட்டி– சத்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 60) உள்ளார். இவர் கோவில் நடையை காலை 6.30 மணிக்கு திறந்து இரவு 7 மணிக்கு அடைப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் கோவில் நடையை சாத்திவிட்டு முருகேசன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள் அங்குள்ள இரும்பு கிரில் கதவில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் கோவிலில் ஏதாவது பொருட்கள் இருக்கிறதா? என தேடிப்பார்த்து உள்ளனர். மேலும் அங்கிருந்து பொருட்களை தூக்கி கீழே வீசினர். மேலும் கோவிலில் உண்டியல் எதுவும் இல்லை. அப்போது அங்கிருந்த பீரோவை பார்த்த மர்ம நபர்கள், அதை தூக்கி கோவிலுக்கு எதிரே உள்ள மைதானத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து பீரோவை உடைத்து அதில் இருந்த பித்தளையிலான பூஜை பொருட்களை திருடி சென்றனர்.

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோவிலுக்கு எதிரே பீரோ உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி கோவிலின் பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்தனர். உடனே அவர்கள் இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story