விமானப்படைக்கு 2-வது நாளாக ஆட்கள் தேர்வு


விமானப்படைக்கு 2-வது நாளாக ஆட்கள் தேர்வு
x
தினத்தந்தி 10 Dec 2018 10:15 PM GMT (Updated: 10 Dec 2018 9:39 PM GMT)

நெல்லையில் நேற்று 2-வது நாளாக விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு நடந்தது.

நெல்லை,

இந்திய விமானப்படையின் ஏர்மேன் குரூப் ஒய் தொழில் நுட்பம் இல்லாத பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்வு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் சென்னை, வேலூர், கோவை, திண்டுக்கல், காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தேர்வு நடந்தது.

விமானப்படை கமாண்டிங் அதிகாரி சைலேஷ்குமார் தலைமையில், விமானப்படை அதிகாரிகள் தேர்வை நடத்தினர். முதற்கட்டமாக இளைஞர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், உடல் எடை ஆகியவைகள் சரிபார்க்கப்பட்டன. பின்னர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட உடல் தகுதி திறன் தேர்வு நடந்தது.

இதில் தேர்வானவர்களுக்கு முதற்கட்ட எழுத்து தேர்வு நடந்தது. உடனடியாக திருத்தப்பட்டு தேர்ச்சி பெறாதவர்கள் வெளியேற்றப்பட்டனர். முதற்கட்ட எழுத்து தேர்வில் 83 பேர் தேர்வானார்கள்.

அவர்களுக்கு நேற்று 2-வது நாளாக 2-ம் கட்ட எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. உடனடியாக திருத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. விமானப்படை தேர்வு நடைபெறுவதையொட்டி வ.உ.சி. மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், அரியலூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், ராமநாதபுரம், பெரம்பலூர், சேலம், நீலகிரி, தேனி, திருச்சி ஆகிய 15 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு நாளை (புதன்கிழமை) தேர்வு நடக்கிறது.


Next Story