2 ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படும் உயர் கோபுர மின்விளக்கு; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


2 ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படும் உயர் கோபுர மின்விளக்கு; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Dec 2018 10:30 PM GMT (Updated: 10 Dec 2018 10:04 PM GMT)

2 ஆண்டுகளாக உயர் கோபுர மின்விளக்கு பழுதடைந்து காணப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பெருமாள் கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பேரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பெருமாள் கோவில் எதிரே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சம் செலவில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. அந்த உயர்கோபுர மின்விளக்கு பயன்பாட்டில் இருந்து வந்தது.

கடந்த 2016–ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வர்தா புயலின் போது இந்த உயர்கோபுர மின்விளக்கு சேதம் அடைந்து கீழே விழுந்தது. இதில் அந்த உயர்கோபுர மின்விளக்கில் இருந்த பல்புகள் சேதம் அடைந்தது. மேலும் உயர்கோபுர மின்விளக்குக்கு செல்லும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

சேதம் அடைந்து 2 ஆண்டுகள் ஆன பின்னரும் அந்த உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்கப்பட வில்லை. அந்த உயர்கோபுர மின்விளக்குக்கு செல்லும் மின்இணைப்பு பெட்டி சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அதன் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளதால் அங்கு பள்ளி மாணவர்கள் சென்றால் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.2 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார். அதைத்தொடர்ந்து தற்போது சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. சுற்றுச்சுவர் அமைக்கும் போது அங்கு சுவரை ஓட்டினாற்போல் இருந்த உயர்கோபுர மின்விளக்குக்கான கம்பத்தை எடுத்து சாலையின் ஓரம் வைத்துவிட்டு சுற்றுச்சுவரை கட்டி முடித்தனர்.

தற்போது அந்த உயர்கோபுர மின்விளக்குக்கு செல்லும் மின்இணைப்பு பெட்டி பாதுகாப்பு இல்லாமல் திறந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. இதனை ஒன்றிய அதிகாரிகளும், பள்ளி நிர்வாகிகளும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சேதம் அடைந்து காணப்படும் உயர்கோபுர மின்விளக்கு மற்றும் மின் இணைப்பு பெட்டியை அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story