சின்னமனூர் அருகே பரிதாபம்: இடுப்பில் சொருகி வைத்த மதுபாட்டில் குத்தியதில் கூலித்தொழிலாளி சாவு


சின்னமனூர் அருகே பரிதாபம்: இடுப்பில் சொருகி வைத்த மதுபாட்டில் குத்தியதில் கூலித்தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 11 Dec 2018 9:45 PM GMT (Updated: 11 Dec 2018 4:50 PM GMT)

சின்னமனூர் அருகே, இடுப்பில் சொருகி வைத்திருந்த மதுபாட்டில் குத்தியதில் கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

சின்னமனூர்,

சின்னமனூர் சாமிகுளத்தை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலையில் மதுபானம் குடித்து விட்டு, சின்னமனூர் பொன்னகர் சாலையில் அப்பாஸ் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு இறந்தவர்களின் உடல்களை ஊர்வலமாக எடுத்து செல்லும் வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் மீது எதிர்பாராத விதமாக அப்பாஸ் மோதி கீழே விழுந்தார். சிறிதுநேரத்தில் அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனால் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அப்பாஸ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மதுபானம் குடித்த அப்பாஸ் மீண்டும் குடிப்பதற்காக ஒரு மதுபாட்டில் வாங்கினார். அதனை தனது இடுப்பில் அவர் சொருகி வைத்திருந்தார். இறந்தவர்களின் உடல்களை ஊர்வலமாக எடுத்து செல்லும் வாகனம் மீது அவர் மோதியபோது, இடுப்பில் இருந்த மதுபாட்டில் உடைந்து அப்பாஸ் வயிற்றை கிழித்தது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த அப்பாசுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ஆசை, ஆசையாய் குடிப்பதற்கு கொண்டு வந்த மதுப்பாட்டிலே அவருக்கு எமனாக மாறிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story