கரூரில் நெகிழ்ச்சி சம்பவம் படிப்பை பாதியில் விட்ட மாணவர்களை பள்ளியில் சேர்த்த சிறுமி


கரூரில் நெகிழ்ச்சி சம்பவம் படிப்பை பாதியில் விட்ட மாணவர்களை பள்ளியில் சேர்த்த சிறுமி
x
தினத்தந்தி 11 Dec 2018 10:45 PM GMT (Updated: 11 Dec 2018 6:49 PM GMT)

படிப்பை பாதியில் விட்ட மாணவர்களை ஒரு சிறுமி பள்ளியில் சேர்த்து விட்டு, அவர்களுக்கு தனது உண்டியல் பணத்தையும் வழங்கிய சம்பவம் கரூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கரூர்,

கரூர் அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டியை சேர்ந்த ரவீந்திரன்-சங்கீதா தம்பதியரின் மகள் ரக்‌ஷனா (வயது 12). கரூர் அருகே ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் ரக்‌ஷனா, மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட சமூக பணிகளில் பங்கெடுத்து வருகிறார். சமீபத்தில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக விமானம் மூலம் தாவர விதைகளை தூவ பிரதமருக்கு கடிதம் எழுதியதோடு, ஒரு நாள் முழுவதும் யோகா செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும், பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் வேட்டைகாரன்புதூர், அரசு காலனி உள்ளிட்ட பகுதிகளில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது ஜோதிலட்சுமி என்ற மாணவி 7-ம் வகுப்பையும், சதீஷ் என்ற மாணவர் 10-ம் வகுப்பையும், மணிவாசுகி என்ற மாணவி 9-ம் வகுப்பையும் படிக்க முடியாமல் பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்தது தெரியவந்தது. அவர்களை கண்ட ரக்‌ஷனா, ஏன் பள்ளிக்கு செல்லவில்லை? என்று கேட்டு, கல்வியின் அவசியத்தை விளக்கமாக எடுத்து கூறி, மீண்டும் பள்ளியில் சேருமாறு அறிவுறுத்தினார். அதன்பேரில் அவர்களும் தங்களது பெற்றோரிடம் ஆலோசித்து விட்டு பள்ளியில் சேர்ந்து கொள்வதாக தெரிவித்தனர்.

இந்தநிலையில் பாதியில் படிப்பை நிறுத்திய ஜோதிலெட்சுமி, மணிவாசுகி, சதீஷ் ஆகியோரை அழைத்துக்கொண்டு கரூரிலுள்ள சி.எஸ்.ஐ. பள்ளிக்கு நேற்று சிறுமி ரக்‌ஷனா வந்தார். அவர்களை பள்ளியில் சேர்த்து விட்டு, தான் கடந்த 8 ஆண்டுகளாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த தொகையில் இருந்து தலா ரூ.5 ஆயிரத்தை படிப்பை தொடர இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார். சிறுமி ரக்‌ஷனாவின் இந்த செயலை அந்த பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள் வெகுவாக பாராட்டினர். பள்ளியில் சேர்ந்த அந்த 3 மாணவ, மாணவிகளும் தங்களது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியதாக கூறி, ரக்‌ஷனாவை கட்டித்தழுவி நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

Next Story