நாகரசம்பட்டி அருகே ஏரியில் தவறி விழுந்த குழந்தை சாவு


நாகரசம்பட்டி அருகே ஏரியில் தவறி விழுந்த குழந்தை சாவு
x
தினத்தந்தி 11 Dec 2018 10:15 PM GMT (Updated: 11 Dec 2018 8:42 PM GMT)

நாகரசம்பட்டி அருகே ஏரியில் தவறி விழுந்து 3½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தான்.

காவேரிப்பட்டணம்,    

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே உள்ள பேருஹள்ளியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் வெங்கடேசன் (வயது 3½). இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை குழந்தை வெங்கடேசன் சுண்டகாப்பட்டி அருகே உள்ள அத்திக்குட்டை ஏரிக்கரை அருகில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது தண்ணீரை பார்த்ததும் அந்த குழந்தை ஏரிக்குள் இறங்க முயன்றது. அந்த நேரம் எதிர்பாராதவிதமாக குழந்தை ஏரியில் தவறி விழுந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக நெடுங்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக குழந்தையை காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்து பலன் அளிக்காமல் குழந்தை வெங்கடேசன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story