பஸ் கண்டக்டர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை திருச்சி கோர்ட்டு தீர்ப்பு


பஸ் கண்டக்டர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை திருச்சி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Dec 2018 10:15 PM GMT (Updated: 11 Dec 2018 10:00 PM GMT)

பஸ் கண்டக்டர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தேவிமங்கலம் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சம்பத்குமார் மகன் ஹரி கிருஷ்ணன் (வயது27). இவர் ஒரு தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்தார். தேவிமங்கலம் அக்கரைப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் லோகநாதன் (33), அக்கரைப்பட்டி கீழ தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி மகன் சதீஷ் (27). இவர்கள் இருவரும் தனியார் நிறுவன ஊழியர்கள்.

கல்லால் அடித்து கொலை

கடந்த 6.5.2015 அன்று ஹரிகிருஷ்ணன் இரவில் தனது மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணுடன் சென்றார். சிறிது நேரத்தில் அவர் மட்டும் தனியாக திரும்பி வந்தார். இதனை பார்த்த லோகநாதனும், சதீசும் அந்த பெண் தொடர்பாக பேசி பிரச்சினை செய்தனர். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஆத்திரம் அடைந்த லோகநாதனும், சதீசும் கல்லால் அடித்து தாக்கியதில் ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ஆயுள் தண்டனை

இதையொட்டி சிறுகனூர் போலீசார் லோகநாதனையும், சதீசையும் கைது செய்து திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி எஸ்.குமரகுரு விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் தலா 4 வருடம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். 

Next Story