சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் கட்டிட தொழிலாளி கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் கட்டிட தொழிலாளி கைது
x
தினத்தந்தி 12 Dec 2018 10:15 PM GMT (Updated: 12 Dec 2018 9:02 PM GMT)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர்,

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் ஹனீபா(வயது 62). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சவுராபீபி. இவர் மதுரையில் வசித்து வருகிறார். ஹனீபா தனது 2-வது மனைவி ரூபியாவுடன் வீரபாண்டியில் குடியிருந்து கட்டிட தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஹனீபா நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள 8 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அவர், சிறுமியை அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார்.

இதை அருகில் உள்ள வீட்டில் இருந்த பெண் ஒருவர் பார்த்துள்ளார். உடனடியாக இதுகுறித்து சிறுமியின் தாய்க்கு அவர் தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு வந்த சிறுமியின் தாய், சிறுமியை அழைத்து இதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போது ஹனீபா தன்னை பாலியல் தொல்லை செய்ததாக சிறுமி அழுதபடி தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தாய் உடனடியாக திருப்பூர் தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று இது பற்றி புகார் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஹனீபாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story