மின் இணைப்பை மாற்ற பூ வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது


மின் இணைப்பை மாற்ற பூ வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
x
தினத்தந்தி 12 Dec 2018 11:00 PM GMT (Updated: 12 Dec 2018 9:27 PM GMT)

தாராபுரத்தில் மின் இணைப்பை மாற்ற பூ வியாபாரியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாரதியார் கிழக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 47). பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மணக்கடவு கிராமத்தில் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் குமார் ஒரு வீடு கட்டியிருந்தார். அந்த வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மும்முனை மின் இணைப்பு பெற்றுள்ளார்.

இந்த மின் இணைப்பிற்கு அதிக கட்டணம் கட்டவேண்டிய நிலை இருப்பதால், வீட்டு உபயோகத்திற்காக பெறப்பட்ட மின் இணைப்பை, விவசாயத்திற்கு மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளார். அதற்காக மணக்கடவு மின்சார வாரிய அலுவலகத்தில், இளநிலை மின்பொறியாளராக பணியாற்றி வரும் தாராபுரம், அலங்கியம் ரோடு, தெற்கு அம்பேத்கர் வீதியை சேர்ந்த கன்னிமுத்து (56) என்பவரை அணுகியுள்ளார்.

அப்போது வீட்டு உபயோகத்திற்காக பெறப்பட்ட மின் இணைப்பை, விவசாய மின் இணைப்பாக மாற்றித் தருவதற்கு குமாரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி கன்னிமுத்து கேட்டுள்ளார். அதற்கு குமார் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரமுடியாது என்று மறுத்துள்ளார். ஆனால் ரூ.2 ஆயிரமாவது கொடுங்கள் மின் இணைப்பை மாற்றி விடலாம் என்று கன்னிமுத்து கட்டாயப்படுத்தி உள்ளார். இதையடுத்து குமாரும் ரூ.2 ஆயிரம் லஞ்சம் தருவதாக ஒப்புக் கொண்டார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் குமார் அது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரி மற்றும் போலீசார் நேற்று தாராபுரம் வந்து குமாரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, கன்னிமுத்துவிடம் கொடுக்குமாறு கூறினர்.

இந்த நிலையில் தாராபுரம்-உடுமலை ரோட்டில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு கன்னிமுத்து வந்துள்ளார். அப்போது குமாரை தொடர்பு கொண்டு லஞ்சப் பணத்தை கொண்டு வருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து குமார் பணத்துடன் சென்றதும், மின்சார அலுவலகத்திற்கு எதிரே இருந்த, டீக்கடையின் அருகே உள்ள மறைவான இடத்தில் வைத்து, கன்னிமுத்து ரூ.2 ஆயிரத்தை குமாரிடம் இருந்து பெற்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கன்னிமுத்துவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அதன் பிறகு அவரை அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, சுமார் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து கன்னிமுத்துவின் வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினார்கள்.

தாராபுரத்தில் கடந்த 3-ந்தேதி நகர நிலவரித்திட்ட அலுவலகத்தில், நில அளவையாளராக வேலை செய்து வந்த கார்த்திக்வேல் என்பவர் பட்டா மாறுதல் செய்து தருவதற்காக லஞ்சம் வாங்கி, கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார். அதையடுத்து மின்சார வாரிய அதிகாரி லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டிருக்கிறார். தாராபுரத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் தொடர்ந்து கைது செய்யப்படும் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



Next Story