கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் பாராளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் பாராளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2018 10:45 PM GMT (Updated: 12 Dec 2018 9:35 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் பாராளுமன்றம் முன்பு ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக எஸ்.ஆர்.இ.எஸ். பொதுச்செயலாளர் சூர்யபிரகாசம் தெரிவித்தார்.

திருச்சி,

தென்னக ரெயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் (எஸ்.ஆர்.இ.எஸ்.) திருச்சி கோட்ட செயற்குழு கூட்டம் ஜங்ஷன் அருகே ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கோட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் பி.எஸ்.சூர்யபிரகாசம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

ரெயில்வேயை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ரெயில்வேயில் பாதுகாப்பு பிரிவில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து அலுமினிய தகடுகள் பொருத்திய ரெயில்கள் இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஜனவரி) 6, 7, 8-ந்தேதிகளில் டெல்லியில் பாராளுமன்றம் முன்பு ரெயில்வே தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அடுத்த மாதம் மத்திய தொழிற்சங்கத்தினர் நடத்தும் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எங்கள் சங்கத்தின் சார்பில் ஆதரவு தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தில் இருந்து சிலர் விலகி தலைமை டிக்கெட் பரிசோதகர் அந்தோணி சாமி தலைமையில் எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்கத்தில் இணைந்தனர். 

Next Story