தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் சாவு


தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 12 Dec 2018 10:00 PM GMT (Updated: 12 Dec 2018 10:05 PM GMT)

தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விழுப்புரம்,

புதுச்சேரி மாநிலம் சிலுக்காரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சங்கர் (வயது 45), முருகன் (47). கூலித்தொழிலாளிகளான இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தில் இருந்து சிலுக்காரிபாளையத்திற்கு சென்றனர். விக்கிரவாண்டியை அடுத்த சிறுவள்ளிக்குப்பம் கூட்டுசாலை அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மோதி இருவரும் படுகாயமடைந்தனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் இறந்தார். முருகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அதையூர் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சபீர்முகமது(வயது 50). இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த பஷீர் முகமது(48) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டையில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். குமாரமங்கலம் அரசு மாதிரி பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது புதுச்சேரியில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் ஒன்று, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சபீர் முகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பஷீர் முகமது மற்றும் காரில் வந்த புதுச்சேரியை சேர்ந்த ராமசாமி(55) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த பஷீர்முகமது, ராமசாமி ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியான சபீர் முகமதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story