திருச்சி விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் மலேசிய பெண் பயணி சிக்கினார்


திருச்சி விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் மலேசிய பெண் பயணி சிக்கினார்
x
தினத்தந்தி 13 Dec 2018 10:45 PM GMT (Updated: 13 Dec 2018 6:49 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சிக்கிய மலேசிய பெண் பயணியிடம் விசாரணை நடந்து வருகிறது.

செம்பட்டு,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் சிங்கப்பூர், மலேசிய தலைநகர் கோலாலம்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னைக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் 24 மணி நேரமும் திருச்சி விமான நிலையம் விழிப்புடனே இருக்கும்.

வெளிநாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அவ்வப்போது தங்களது உடைமைகளில் மறைத்து தங்கம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் மற்றும் அரியவகை உயிரினங்கள் கடத்தி வரும்போது சோதனையில் சிக்கி இருக்கிறார்கள். மேலும் விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்களுமே கடத்தலுக்கு துணைபோனது கடந்த சில மாதங்களுக்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் கண்டறியப்பட்டு கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது. அதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ‘ஏர்ஏசியா’ விமானம் நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மலேசியாவை சேர்ந்த கமலாம்பிகை என்ற பெண் தனது உடைமைகளுக்குள் மறைத்து 529 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும். தொடர்ந்து பெண் பயணி கமலாம்பிகையிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story