தனியார் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து குதித்து நர்சு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


தனியார் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து குதித்து நர்சு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Dec 2018 11:15 PM GMT (Updated: 13 Dec 2018 9:13 PM GMT)

நாகர்கோவிலில் தனியார் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து குதித்து நர்சு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் திருவட்டார் வீயனூரை சேர்ந்தவர் நல்லதம்பி. இவருடைய மகள் அனுஷா (வயது 20), நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கண் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். ஆஸ்பத்திரிக்கு சொந்தமான விடுதியிலேயே தங்கி இருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று மாலை ஆஸ்பத்திரியின் 3-வது மாடிக்கு சென்ற அனுஷா திடீரென அங்கிருந்து குதித்து விட்டார். இதில் அவருக்கு தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தோடியது. இதைப் பார்த்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் போலீசார் அனுஷாவை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் அனுஷா பரிதாபமாக இறந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அனுஷா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இருந்தாலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

நேற்று காலை அனுஷா வழக்கம் போல பணிக்கு சென்றுள்ளார். தோழிகளுடனும், சக நர்சுகளுடனும் எப்போதும் போன்று சகஜமாகவே பேசியதாக கூறப்படுகிறது. இப்படி இருக்க அவர் திடீரென இந்த விபரீத முடிவை எடுத்தது ஏன்? என்பது மர்மமாக உள்ளது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், “அனுஷா அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். ஆஸ்பத்திரியில் பணியில் இருக்கும் போது செல்போனில் பேசி வந்ததால் அனுஷாவை ஆஸ்பத்திரி நிர்வாகம் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் அனுஷா தங்கியிருந்த விடுதியில் ஒரு பெண்ணின் நகை கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போய் உள்ளது. அந்த நகையை அனுஷா தான் திருடி இருக்க வேண்டும் என்று நினைத்து அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இதனால் அவமானம் அடைந்து அனுஷா தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவருடன் பணிபுரிந்த மற்ற நர்சுகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனுஷா தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் அனுஷாவின் உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.

Next Story