மேகமலை வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகள் இறப்பது பற்றி சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி வழக்கு


மேகமலை வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகள் இறப்பது பற்றி சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி வழக்கு
x
தினத்தந்தி 13 Dec 2018 11:11 PM GMT (Updated: 13 Dec 2018 11:11 PM GMT)

மேகமலை வனப்பகுதியில் தொடர்ச்சியாக யானைகள் இறப்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மதுரை,

கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இமானுவேல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மேகமலை வனவிலங்கு சரணாலயம் 630 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மேகமலையில் புலிகள், யானைகள், சிங்கவால் குரங்கு, காட்டு நாய் என பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அங்குள்ள பெரியார் புலிகள் சரணாலயம் மற்றும் அணில்கள் சரணாலயத்துக்கு மேகமலை வழியாகவே யானைகள் இடம் பெயர்கின்றன. அந்த சமயத்தில் மேகமலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழக்கின்றன. சமீபத்தில் இதுபோல மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பது அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் செல்லும் மின்கம்பிகள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் இதுபோன்ற விபத்துகள் தொடர்கின்றன.

மேகமலையில் கம்பம் வடக்கு பகுதியில் கடந்த 6 மாதத்தில் 7 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்தன. இந்தநிலையில் கடந்த வாரம் ஒரு யானை இறந்துள்ளது. இந்த யானையின் தந்தத்தை வெட்டி எடுப்பதற்காக சட்டவிரோத கும்பல் ஒன்று அந்த யானையை கொன்றுள்ளது. சமீபத்திய ஆய்வின்படி யானைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

இந்தநிலையில் ஒரே பகுதியில் யானைகள் இறந்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது பற்றி தேசிய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் சி.பி.ஐ. போலீசார் இணைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட வனத்துறை மற்றும் மின்சாரத்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், இந்த வழக்கில் தேசிய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் சி.பி.ஐ. போலீசாரை எதிர்மனுதாரர்களாக சேர்த்தும் இதுகுறித்து சி.பி.ஐ. போலீசார், தேசிய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள், தமிழக தலைமை வன பாதுகாவலர் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story