பொங்கல் பண்டிகைக்காக அறுவடைக்கு தயார் நிலையில் கரும்புகள்


பொங்கல் பண்டிகைக்காக அறுவடைக்கு தயார் நிலையில் கரும்புகள்
x
தினத்தந்தி 14 Dec 2018 10:30 PM GMT (Updated: 14 Dec 2018 9:53 PM GMT)

பொங்கல் பண்டிகைக்காக அறுவடைக்கு தயார் நிலையில் கரும்புகள் உள்ளன.

தஞ்சாவூர்,

தமிழர்களின் பண்டிகைகளுள் முக்கியமானது பொங்கல் பண்டிகை. தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை அன்று வீடுகளில் கோலமிட்டு, புதுப்பானைகளில் புது அரிசியை பொங்கலிட்டு கதிரவனுக்கு படையலிட்டு புத்தாடை அணிந்து மக்கள் கொண்டாடுவார்கள்.

இந்த பொங்கல் பண்டிகையில் முக்கிய இடத்தை பிடிப்பது கரும்பு, மஞ்சள் கொத்து தான். அதிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்புவது கரும்பைத்தான். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 1 மாதம் இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு விற்பனையாகும் கரும்பு தைபூசத்துடன் நிறைவடையும்.

தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எங்கு கரும்பு சாகுபடி செய்யப்பட்டாலும் காவிரிக்கரையோரம் செய்யப்பட்டுள்ள கரும்புகளுக்கு தனிச்சுவை உண்டு. காவிரி பாயும் தஞ்சை மாவட்டத்தில் சூரக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, திருவிடைமருதூர், அம்மாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனை செய்வதற்காக ஏராளமான ஏக்கரில் கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இங்கு விளையும் கரும்புகள் சென்னை, திருச்சி, திருவாரூர், நாகை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வியாபாரிகள் இங்கு வந்து கரும்புகளை கொள்முதல் செய்வார்கள்.

தற்போது கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இன்னும் 10 நாட்களுக்கு பிறகு கரும்புகள் அறுவடை பணி நடைபெறும். கஜா புயலால் பல இடங்களில் கரும்புகள் சாய்ந்துவிட்டன. இதனால் போதிய விலை கரும்புக்கு கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.



Next Story