மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரம்; மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்


மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரம்; மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்
x
தினத்தந்தி 15 Dec 2018 12:30 AM GMT (Updated: 15 Dec 2018 12:27 AM GMT)

மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து, புதுச்சேரி சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கொண்டு வந்த தீர்மானம் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

புதுச்சேரி,

கர்நாடக மாநிலத்தின் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான பூர்வாங்க திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழகம், புதுச்சேரியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த அனுமதியை ரத்துசெய்ய வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோன்ற தீர்மானத்தை புதுவையிலும் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து இதற்கான சிறப்பு சட்டமன்ற கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் மேகதாதுவில் புதிய அணை அமைப்பதற்கு கண்டனம் தெரிவித்தல் மற்றும் அணை ஏதும் கட்டப் படாமல் தடுப்பது குறித்த அரசு தீர்மானத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி கொண்டு வந்தார்.

அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநில மக்களின் நலனுக்கு எதிராகவும், சுப்ரீம் கோர்ட்டால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு மாற்றாகவும் காவிரியின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் ஓர் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்கு இந்த சட்டசபை தனது கண்டனத்தை பதிவு செய்வதுடன் எதிர்ப்பையும் பதிவு செய்கின்றது. புதுச்சேரி உள்பட காவிரிப்படுகை மாநிலங்களின் கருத்துகளை கோராமல் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கை புதுச்சேரி மக்களின் நலனுக்கு எதிரானதாகும்.

மேகதாதுவில் புதிய அணை அமைப்பதற்கான பூர்வாங்க திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு அரசுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கிய மத்திய நீர்வள ஆணையத்தின் நட வடிக்கைக்கு இந்த சட்டசபை தனது கண்டனத்தை பதிவு செய்கிறது. புதுச்சேரி உள்ளிட்ட காவிரி பாசன மாநிலங்களின் முன் இசைவு பெறாமல் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான பூர்வாங்க திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழை மத்திய நீர்வள ஆணையம் உடனடியாக திரும்பப்பெற மத்திய அரசு உத்தரவிடக்கோரியும், மற்றும் கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் மேலும் தொடர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தடை விதித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்த சட்டசபை கேட்டுக்கொள்கிறது.

மேலும் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை ஏதும் கட்டாமல் தடுத்திடவும், சுப்ரீம்கோர்ட்டால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி புதுச்சேரிக்கு வழங்கப்பட்ட நீராதார உரிமைகளை பாதுகாத்திடவும், புதுச்சேரி அரசு நிர்வாக ரீதியாகவும், சட்டரீதியாகவும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பது.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்களை பேச அழைத்தார். அப்போது எழுந்த எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, தீர்மானம் மிக சரியாக உள்ளது. இதை நாங்கள் ஆதரிக்கிறோம். இதை விவாதமின்றி ஏகமனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பலாம் என்றார்.

ஆனால் அ.தி.மு.க., பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் தீர்மானத்தின் மீது பேசவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து தீர்மானத்தின் மீது பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து தீர்மானத்தின் மீது அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், சிவா, அசனா, எம்.என்.ஆர்.பாலன், சங்கர், கீதா ஆனந்தன், சாமிநாதன் ஆகியோர் பேசினார்கள். இறுதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமியும் தனது கருத்துகளை பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் தீர்மானத்துக்கு ஆதரவாக இருப்பதால் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

Next Story