ராணுவத்தில் சேர்க்கப்பட்ட ‘ரோபோ’


ராணுவத்தில் சேர்க்கப்பட்ட ‘ரோபோ’
x
தினத்தந்தி 15 Dec 2018 10:35 AM GMT (Updated: 15 Dec 2018 10:35 AM GMT)

இங்கிலாந்து ராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ரோபோவின் ஆரம்பகட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றிருக்கிறது.

அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகள் தங்கள் ராணுவத்தில் ரோபோக்களை வைத்துள்ளன. அந்த வரிசையில் இணைந்துகொள்ளும் விதத்தில், இங்கிலாந்தும் ரோபோவை ராணுவத்தில் களமிறக்க நினைத்தது.

அதன்படி, போர் மற்றும் தீவிரவாதத் தாக்குதலில் இருந்து மனித உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், ரோபோவை வைத்துப் போரிடும் முறையை உருவாக்கி வருகிறது.

இதற்கான சோதனை ஓட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், சுமார் ஒன்றரை டன் எடை உடைய, டாங்க் போன்ற அமைப்பிலான ரோபோ பயன்படுத்தப்பட்டது. சாதாரணமாக ஒன்றரை அடி உயரம் கொண்ட இந்த ரோபோவில், தேவைக்கு ஏற்ப 7 அடி உயரம் வரை அதன் தொலைநோக்கியை உயர்த்திக் கொள்ளலாம்.

கணினி உதவியுடன் இந்த ரோபோவை ஜாய்ஸ்டிக் மூலம் இயக்க முடியும். இந்த ரோபோவில் எந்திரத் துப்பாக்கி, சிறிய வகை ராக்கெட், குண்டுகள் போன்றவற்றையும் பொருத்த முடியும். எனவே இந்த ரோபோவைக் கொண்டு எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் அதேவேளையில், தாக்குதலையும் நடத்த முடியும். ஓட்டுநர் இல்லாத கவச பீரங்கி வாகனங்களும் இங்கிலாந்து ராணுவத்தால் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

Next Story