மக்கள் அமைதி காக்க வேண்டும்: “ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமோ என்று அச்சப்பட தேவை இல்லை” கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி


மக்கள் அமைதி காக்க வேண்டும்: “ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமோ என்று அச்சப்பட தேவை இல்லை” கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
x
தினத்தந்தி 15 Dec 2018 10:45 PM GMT (Updated: 15 Dec 2018 5:34 PM GMT)

“ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமோ என்று அச்சப்பட தேவை இல்லை. மக்கள் அமைதி காக்க வேண்டும்“ என்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் விவாதம் நடத்தப்பட்டு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. இது இறுதி தீர்ப்பு இல்லை. இன்னும் சட்டரீதியான வாய்ப்புகள் உள்ளன. சட்டரீதியாக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம். பசுமை தீர்ப்பாயம் உத்தரவில் பல நிபந்தனைகள் உள்ளன. அதனை பற்றி தற்போது ஆலோசிக்க வேண்டியது இல்லை.

மக்கள் இந்த ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று அச்சப்பட தேவை இல்லை. அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. கண்டிப்பாக இந்த ஆலை இயங்கக்கூடாது என்றுதான் அரசாணை வெளியிட்டு மூடப்பட்டது. இதுதொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளோம். மக்கள் அமைதி காக்க வேண்டும். எந்தவித போராட்டத்திலும் ஈடுபட வேண்டிய தேவை இல்லை. முறையாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக ஆலை திறக்கப்போகிறார்கள் என்று கூறுவது தவறான தகவல். நாளைக்கே ஆலையை திறக்க எந்த உத்தரவும் இல்லை.

ஆலையில் இருந்து ரசாயன பொருட்கள் எடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த உத்தரவுக்கு பிறகு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Next Story