திருச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் இறுக்கி அணைத்து முத்தமிடும் காட்சி


திருச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் இறுக்கி அணைத்து முத்தமிடும் காட்சி
x
தினத்தந்தி 15 Dec 2018 11:30 PM GMT (Updated: 15 Dec 2018 6:54 PM GMT)

திருச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் இறுக்கி அணைத்து முத்தமிடும் கிளு கிளு வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி,

திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பாலசுப்பிரமணியன்(வயது54). கொடாப்பு கிராமத்தை சேர்ந்த அவர், சில ஆண்டுகளாக சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இதே போலீஸ் நிலையத்தில் கணினி பிரிவில் திருச்சி புத்தூரை சேர்ந்த 32 வயது பெண் போலீஸ் பணியாற்றி வருகிறார்.

கடந்த 10-ந் தேதி இருவருக்கும் போலீஸ் நிலையத்தில் இரவுப்பணி வழங்கப்பட்டிருந்தது. பெண் போலீஸ், அன்றைய தினம் ‘பாரா’ பணியினையும் கவனித்து வந்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனுக்கு இரவு ரோந்துபணி வழங்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் போலீஸ் நிலையம் வந்த பாலசுப்பிரமணியன், தன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலில் கிடந்த ஷூவை கழற்றி அடித்ததாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக்கிடம் அவர் புகார் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்றதாக சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன், இந்த நிகழ்வு பெண் போலீஸ் ஒத்துழைப்புடன் தான் நடந்தது. ஆனால் பெண் போலீஸ் பொய்யான புகார் கொடுத்ததால் விசாரிக்காமலேயே எனக்கு மட்டும் தண்டனை வழங்கப்பட்டு விட்டது. உண்மையை கண்டறிய வேண்டுமானால், போலீஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி.கேமரா பதிவை ஆய்வு செய்து பார்க்கட்டும் என சக காவல்துறை நண்பர்களிடம் புலம்பி வந்தார்.

இந்த தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் கவனத்துக்கும் சென்றது. அவர் இது குறித்து விசாரிக்க, ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் சி.சி.டி.வி.கேமராவில் பதிவான காட்சிகளை பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்தார். மேலும் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் ஆகியோரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை தொடர்பான அறிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நேற்று முன்தினம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் சமர்ப்பித்தார்.

இந்த நிலையில் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் பெண் போலீஸ் இருவரும் சேர்ந்து நடத்திய லீலைகள் தொடர்பான கிளு கிளு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோவில் பதிவான காட்சிகள் விவரம் வருமாறு;-

சம்பவத்தன்று இரவு 10.29 மணிக்கு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் போலீஸ் நிலையத்திற்கு வருகிறார். அங்கு பெண் போலீஸ் மட்டும் தொலைபேசி உள்ள மேஜை அருகில் நாற்காலியில் அமர்ந்துள்ளார். அவரது அருகில் வந்த பாலசுப்பிரமணியன், காதில் ஏதோ நைசாக சொல்வதுபோல தெரிகிறது. சிறிது நேரத்தில் நாற்காலியுடன் அமர்ந்துள்ள பெண் போலீசை அவர், இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தமிடும் லீலை தொடங்குகிறது. பின்னர் சற்று நேரத்தில் இருவரும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிடும் கிளு கிளு காட்சிகளும் அரங்கேறுகிறது. 2 நிமிடம் 50 வினாடிகள் ஓடும் வீடியோ காட்சியில், அந்த பெண் போலீஸ் கொஞ்சம்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவரது முழு ஒத்துழைப்புடன்தான் இந்த நிகழ்வுகள் அரங்கேறி உள்ளதை அறிய முடிகிறது.

சற்று நேரத்தில் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஒருவர் வருகிறார். அப்போது திடீரென்று நாற்காலியில் இருந்து எழுந்த பெண் போலீஸ், தன்னை கட்டாய முத்தம் கொடுத்ததாக சப்-இன்ஸ்பெக்டர் குறித்து தனிப்பிரிவு ஏட்டுவிடம் புகார் கூறி அழத்தொடங்குகிறார்.

இவ்வாறு அந்த வீடியோ பதிவில் காட்சிகள் உள்ளன. அதை நம்பி அவர், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி இருக்கிறார்.

மேலும் மறுநாள் பெண் போலீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுக்கவே சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இருவரும் நடத்திய லீலை தொடர்பான சில்மிஷ வீடியோ வெளியாகி இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story