மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்வதைப்போல் நடித்து ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி வீட்டில் 18½ பவுன் நகை திருட்டு - மர்ம ஆசாமிகள் கைவரிசை


மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்வதைப்போல் நடித்து ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி வீட்டில் 18½ பவுன் நகை திருட்டு - மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 15 Dec 2018 10:26 PM GMT (Updated: 15 Dec 2018 10:26 PM GMT)

அதிகாரிகள் ஆய்வு செய்வதைப்போல் நடித்து ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி வீட்டில் 18½ பவுன் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் 2 பேர் திருடிச்சென்றனர்.

திருப்பூர்,

திருப்பூரில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்வதைப்போல் நடித்து ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி வீட்டில் 18½ பவுன் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் 2 பேர் திருடிச்சென்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் கருவம்பாளையம் எல்.ஆர்.ஜி. லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(வயது 77). இவர் ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி. இவருடைய மனைவி சிவகாமி(72). சம்பவத்தன்று காலை சுப்பிரமணியம் வெளியே சென்று விட்டார். வீட்டில் சிவகாமி மட்டும் இருந்துள்ளார். அந்த நேரத்தில் மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் திருப்பூர் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் என்று தங்களை அறிமுகம் செய்து விட்டு சிவகாமி வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

ஒருவர் சிவகாமியிடம் பேச்சுக்கொடுக்க, மற்றொருவர் வீட்டுக்குள் சென்று தொட்டி மற்றும் குடங்களில் கொசுப்புழு எதுவும் உள்ளதா? என்று ஆய்வு செய்வது போல் நடித்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த ஆசாமி சிவகாமியின் கவனத்தை திசை திருப்பி, வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த 18½ பவுன் நகை, ரூ.76 ஆயிரத்தை திருடி விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு ஆய்வு முடிந்து விட்டது என்று கூறி 2 ஆசாமிகளும் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்று விட்டனர்.

பின்னர் சிவகாமி வீட்டுக்குள் சென்றபோது பீரோ திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த நகை, பணம் திருட்டு போனது தெரியவந்தது. அதன்பிறகே மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்வதைப்போல் நடித்து நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்ற விவரம் சிவகாமிக்கு தெரியவந்தது. இதுகுறித்து சுப்பிரமணியம் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தியிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story