நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்து போட்டியிடும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்து போட்டியிடும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 16 Dec 2018 10:15 PM GMT (Updated: 16 Dec 2018 6:17 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

கோவை,

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று கோவை வந்தார். கோவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூட்டுப்போட்டு பூட்டினார். ஆலை உரிமையாளர் மேல் முறையீடு செய்ததால் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதால் ஆலையை மீண்டும் திறக்க எவ்வித சாத்தியக்கூறும் இல்லை. கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மின்சார ஊழியர்கள் இரவு, பகலாக செயல்பட்டதின் காரணமாக மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. சில கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்காமல் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புயலால் வீடு இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை.

எந்த திட்டம் அறிவிக்கப்பட்டாலும் ஊழல் குற்றச்சாட்டு கூறுவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. அரசு மீது சிலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். கண்டிப்பாக அவர்கள் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள்தான். குட்கா வழக்கு தற்போது விசாரணையில் இருப்பதால் அது குறித்து எதுவும் கூற முடியாது. இந்த வழக்கில் அரசு தலையிடவும் முடியாது.

அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் கவரப்பட்டு கட்சிக்கு வந்தவர்கள். கண்டிப்பாக அவர்கள் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள். டி.டி.வி.தினகரன் அணியில் இருப்பவர் கள் நொந்துபோய் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது எங்கு செல்லலாம் என்று காத்து இருக்கிறார் கள்.

இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அதுதான் உண்மையான அ.தி.மு.க.. அங்குதான் தொண்டர்களும் இருப்பார்கள். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து செல்பவர்கள் தற்போது மீண்டும் கட்சிக்கு வர விரும்புகிறார்கள். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையை ஏற்கிறவர்கள் யார் வேண்டும் என்றாலும் வரலாம். அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

செந்தில் பாலாஜி தனிப்பட்ட காரணத்துக்காக தி.மு.க.வில் இணைந்து உள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அப்பாவி மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் விடுதலைக்காக அ.தி.மு.க. போராடி வருகிறது. சில பிரச்சினைகளை வைத்து அரசியல் விளையாட்டு நடக்கிறது. ராஜீவ்காந்தி கொலையாளிகள் 7 பேரும் விரைவில் விடுதலையாகி சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள்.

தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இதனால்தான் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அவர்கள் கூட்டணி அமைத்து வருகிறார்கள். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. இதனால் எவ்வித பயமும் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்ததும், அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்து போட்டியிடும். அதற்கான பணியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். எப்போதும் இல்லாத அளவுக்கு நாங்கள் அமைக்கும் மெகா கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story